அதிர்ச்சி..! நிலம் தாங்க எங்க வாழ்க்கை.. தற்கொலை செய்த விவசாயி.. சடலத்துடன் சாலை மறியல்.. நடந்தது என்ன..?

Published : Apr 14, 2022, 09:56 AM IST
அதிர்ச்சி..! நிலம் தாங்க எங்க வாழ்க்கை.. தற்கொலை செய்த விவசாயி.. சடலத்துடன் சாலை மறியல்.. நடந்தது என்ன..?

சுருக்கம்

விவசாய நிலத்தில் கெயில் எரிவாய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.   

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு வட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாலவாடி பகுதியில் கெயில் நிறுவனம் சார்பில் நில அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதனையடுத்து போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்துறை அதிகாரிகளிடம், எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நிலங்களை இழந்து எரிவாயுக் குழாய் பதிக்க விளைநிலங்களை தர மாட்டோம் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுக்குறித்து மனு அளிக்க உள்ளதாகவும் அதுவரை அளவீட்டுப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனால் நில அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் தான், நேற்று காலை பாலவாடி பகுதியில் உள்ள கிராமங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கெயில் நிறுவனம் மீண்டும் நிலம் அளவிடும் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலவாடி அடுத்த கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன், தனது விளைநிலத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கணேசனின் குடும்பத்தாரும், உறவினர்களும் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் சென்று தருமபுரி - பென்னாகரம் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா ஆகியோர் நேரில் சென்று  போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

முன்னதாக கெயில் நிறுவனம் சார்பில் கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகா மாநிலம் வரை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில், எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பெரும் போராட்டத்தை மேற்கொண்டர்.

மேலும் எரிவாயு குழாய்களை தேசிய நெடுஞ்சாலையோரமாக பதித்து எடுத்து செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.  இதனிடையே விவாசாயிகள் போராட்டம் பெரிய அளவில் உருவெடுத்ததை அடுத்து, கெயில் திட்டத்தை தமிழகத்தின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவினை எதிர்த்து, இந்த விவகாரம் தொடர்பாக கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக அனுமதி வழங்கியதால் மீண்டும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்