எந்நேரமும் ஓயாமல் ஆண் நண்பருடன் செல்போனில் கடலை.. ஆத்திரத்தில் கணவர் செய்த பகீர் காரியம்..!

By vinoth kumarFirst Published Aug 26, 2021, 12:46 PM IST
Highlights

வழக்கம்போல பணிக்கு சென்ற விஜய் தொடர்ந்து பல முறை தனது மனைவி ப்ரியாவிற்கு செல்போனில் அழைத்துள்ளார்.   சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக ப்ரியா யாரிடமோ செல்போனில்  பேசிக்கொண்டிருந்துள்ளார்.  அப்போது விஜய்-ன் அழைப்பு, கால் வெய்டிங்கில் வந்தும் ப்ரியா எடுக்காமல் அலட்சியமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். 

கணவனின் செல்போன் அழைப்பை ஏற்காமல் ஆண் நண்பருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசிய மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் காமராஜ் வீதி பகுதியை சேர்ந்தவர் விஜய் (35).  அவிநாசி அருகே நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு ப்ரியா (30) என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று வழக்கம்போல விஜய் பணிக்கு சென்றுள்ளார்.  ப்ரியா தனது இரு மகள்களையும் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் காலை 11.00 மணிக்கு விட்டுவிட்டு வீடு திரும்பி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  

இதையடுத்து காலை முதல் தனது மனைவி தனது செல்போன் அழைப்பை ஏற்காததால் சந்தேகம் அடைந்த விஜய் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைக்கு அழைத்து கடை உரிமையாளர் சித்ரா என்பவரிடம் விவரத்தை கூறியுள்ளார். இதனையடுத்து, வீட்டுக்கு சென்று பார்த்த போது ப்ரியா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். உடனே இதுதொடர்பாக கணவர் விஜயிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ப்ரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை செய்யப்பட்ட பிரியா அணிந்திருந்த  தங்க நகைகள், காலில் அணிந்திருந்த வெள்ளி கொலுசு உள்ளிட்டவை காணாமல் போயிருப்பதைக் கண்டு நகைக்காக நடந்த கொலையாக இருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்தது. இதற்குள் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு வந்த விஜய் போலீசார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கதறி அழுது கூப்பாடு போட்டுள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை  ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த சமயம் விஜய் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து, அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;-   ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்த விஜய் அதை மறைத்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ப்ரியாவை 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். விஜயின் மனைவி ப்ரியாவிற்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்து வந்ததாகவும், அவருடன் ப்ரியா அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசிவருவதாகவும் இதை கண்டித்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது.  மேலும், அவ்வப்போது மது போதையில் இந்த விவகாரம் குறித்து விஜய் தனது மனைவி ப்ரியாவை அடித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற விஜய் தொடர்ந்து பல முறை தனது மனைவி ப்ரியாவிற்கு செல்போனில் அழைத்துள்ளார்.   சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக ப்ரியா யாரிடமோ செல்போனில்  பேசிக்கொண்டிருந்துள்ளார்.  அப்போது விஜய்-ன் அழைப்பு, கால் வெய்டிங்கில் வந்தும் ப்ரியா எடுக்காமல் அலட்சியமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரத்துடன் வீட்டுக்கு வந்த விஜய் ப்ரியாவை கடுமையாக தாக்கி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் நகைக்காக கொலை நடந்தது போல அணிந்திருந்த நகைகளை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, விஜயை போலீசார் கைது செய்துள்ளனர். 

click me!