ஒரே நாள்... இரண்டு இடங்கள்... 3 நபர்கள்... நெல்லையில் நடந்த பகீர் கிளப்பும் சம்பவங்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 17, 2021, 11:33 AM IST
Highlights

நெல்லையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் 3 நபர்களுக்கு அரிவாள் வெட்டு, வீடுகள் மீது தாக்குதல், வைக்கோல் போருக்கு தீவைத்தல் ஆகிய சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பாலமுகேஷ் எனும் இளைஞர் அங்குள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். படுகாயம் அடைந்த பாலகேஷை அங்கிருந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகள், வாகனங்களை சிலர் கற்களை வீசி சேதப்படுத்தியுள்ளனர், வைக்கோல் போருக்கும் தீ வைத்துள்ளனர். அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியவர்கள் கைது செய்ய வலியுறுத்தி பாலமுகேஷ் உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட அதே சமயத்தில், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் சாலை மறியல் செய்தனர். 

இதையடுத்து முன்னீர்பள்ளம் பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் முன்னீர்பள்ளம் அருகேயுள்ள கோபால சமுத்திரத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள், சின்னத்துரை ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இருவரும் பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தமிழர் முகாம்களைச் சேர்ந்தவர்களும் மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.  
 

click me!