தூக்கு தண்டனை உறுதி: நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 22-ம் தேதி மரண தண்டணை:

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2020, 3:24 PM IST
Highlights

“ மனுதாரர்கள் முகேஷ் சிங், வினய் குமார் சர்மா ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த சீராய்வுமனுக்களை பரிசீலிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம்”

உச்ச நீதிமன்றம் அதிரடி நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் 4 பேரில் 2 பேர் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது.சீராய்வு மனு என்பது உச்ச நீதிமன்றத்தில் நி்வாரணம் பெறும் கடைசி வாய்ப்பாகும். இந்த மனு நிராகரிக்கப்பட்டதால் இனிமேல் சட்டநிவாரணம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2012-ம் ஆண்டு, டெல்லியில் 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அதன்பின் மீட்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். 

மாணவியைப் பலாத்காரம் செய்ததாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக்சய் குமார் சிங் கடந்த மாதம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க உத்தரவிடக் கோரி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஸ் குமார் அரோரா வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார், ேமலும் சட்டநிவாரணங்களை அடுத்து 14 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்தார் இந்த சூழலில் குற்றவாளிகளில் இருவர் முகேஷ் சிங், வினய் சர்மா இருவரும் உச்ச நீதிமன்றத்தில் தங்களின் தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.நாரிமன், ஆர்.பாணுமதி , அசோக் பூஷன் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், “ மனுதாரர்கள் முகேஷ் சிங், வினய் குமார் சர்மா ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த சீராய்வுமனுக்களை பரிசீலிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என அறிவித்தனர். இந்த தீர்ப்பு குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நிருபர்களிடம் கூறுகையி்ல், “கடந்த 7 ஆண்டுகளாக எனது மகளுக்கு நீதி கேட்டு போராடிய எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. எனக்கு இன்று மிகப்பெரிய நாள். ஆனால், வரும் 22-ம் தேதித அந்த 4 பேரும் தூக்கிலிட்டபின்புதான் அந்த நாள் எனக்கு மகிழ்ச்சியாக அமையும்” எனத் தெரிவித்தார்
 

click me!