சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை சீரியஸ்... தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி..!

By Thiraviaraj RMFirst Published Jul 16, 2019, 11:17 AM IST
Highlights

ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.  

ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.  

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறி சிகிச்சைக்கு அனுமதிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவரது மகன் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், ‘’72 வயதான என் தந்தை ராஜகோபால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. படுத்த படுக்கையாக இருக்கும், அவருக்கு வலது கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இடது கண்ணில் பாதியளவு பார்வை உள்ளது. பிறரது உதவி இல்லாமல், அவரால் எந்த வேலை செய்ய முடியாது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதன்படி, கடந்த 9-ந்தேதி என் தந்தை படுத்தபடுக்கையாக நீதிமன்றத்திற்கு தூக்கிவரப்பட்டார். அவரை சிறையில் அடைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நலம் மோசமாக உள்ளதால், தற்போது ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை வழங்க மருத்துவ உபகரணங்கள் அங்கு இல்லை.

என் தந்தைக்கு உதவியாளர்கள் இல்லை. அவரது உடல்நிலை படுமோசமாகி வருகிறது. இதனால், ஏற்கனவே சிகிச்சைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு இடமாற்ற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடந்த 14-ந்தேதி கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சிகிச்சைக்காக என் தந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் மாற்றும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபாலின் உடல்நலம் குறித்து விவர அறிக்கையை இன்று தாக்கல் செய்யும்படி ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீனுக்கு உத்தரவிட்டனர்.

இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டான்லி மருத்துவமனை டீன் அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது ராஜகோபாலின் உடல்நிலை மோசமாக உள்ளதால் வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது எனத் தெரிவித்தார். இருப்பினும் இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலை அனுமதிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   
 

click me!