பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் அட்டகாசம்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பொதுமக்கள் முறையீடு..!

By Thiraviaraj RMFirst Published Sep 19, 2019, 5:05 PM IST
Highlights

கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் காரை நட்டநடு ராத்திரியில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் மறித்து ரகளை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கண்ணபிரான். இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில இளைஞர் அணி தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு கொலை, கொலைமிரட்டல், ஆட்கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.

கடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அவரை  இருபது வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முன்தினம்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து நெல்லை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது கோவில்பட்டி போலீசார் அவர்களது காரை மறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நெல்லை அருகே உள்ள துறையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கிருந்த கிராமத்தினருடன் சினிமாவை மிஞ்சும் வகையில் அடாவடி செய்யத் தொடங்கினர். இவர்கள் வாகனத்தில் பயங்கரமான ஆயுதங்களுடன், கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வந்ததாக அறிந்து கொண்ட மக்கள் அச்சத்தில் உரைந்தனர்.  அப்போது, அந்த வழியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காரில் கன்னியாகுமரி சென்று கொண்டு இருந்தார். அவரது காரையும் கட்சி நிர்வாகிகள் மறித்தனர். 

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகிகளை நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். அதற்கு பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார். இதற்கிடையே, நெல்லை தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணபிரானுடன் வந்த மற்றொரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் அரிவாள்கள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. பின்னர் காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அந்த அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

click me!