ரமணா பட பாணியில் அடாவடி செய்த மருத்துவமனை... காசு கொடுத்துவிட்டு நோயாளியை அழைத்து செல்ல சொன்ன கொடுமை!!

By sathish kFirst Published Sep 17, 2019, 4:22 PM IST
Highlights

மருத்துவ செலவு தொகையை கொடுக்காததால் நோயாளியை தர மறுத்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரமணா பட பாணியில் அடாவடி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி தெற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் சிவதாஸ். இவரது மனைவி அமுதா. சிவதாசுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது மனைவி சிகிச்சைக்காக சேர்த்தார். சில நாட்கள் உடல் தேறி வந்த நிலையில் அவருக்கு ஒரு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. பின்னர் மீண்டும் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அமுதாவிடம் உங்களது கணவரை இனிமேல் காப்பாற்ற முடியாது. ரூ.65 ஆயிரம் பணம் கட்டிவிட்டு அவரை அழைத்து செல்லுங்கள் என கூறி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி ஆன அமுதா தன்னிடம் அவ்வளவு காசு இல்லை என்றும், தனது கணவரை காப்பாற்றி தரும்படியும் கெஞ்சி அழுதுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் பணத்தை கட்டாமல் அவரது கணவரை அழைத்து கொண்டுபோக முடியாது என சொல்லிவிட்டார்களாம்,
இதனால் மிகுந்த கவலை அடைந்த அமுதா தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்டு பார்த்தார். கிடைக்காததால் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் இது குறித்து தொலைபேசியில் புகார் அளித்தார். 

அவர் மருத்துவமனை டாக்டர்களிடம் பேசுவதாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் பிறகும் கூட  டாக்டர்கள் பணத்தை கட்டிவிட்டு சிவதாசை அழைத்து செல்ல வேண்டும் என தெரிவித்தனர். 

இது குறித்து அமுதா தெரிவிக்கையில், எனது கணவர் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு இதுவரை ரூ.10 ஆயிரம் பணம் கட்டி உள்ளேன். தற்போது அவரது நிலைமை மோசமாகிவிட்டதாகவும் காப்பாற்ற முடியாது என்று கூறி இதுவரை மருத்துவமனை செலவாக ரூ.65 ஆயிரம் கட்டிவிட்டு செல்லுமாறு மிரட்டுகின்றனர். எனது கணவரை காப்பாற்றி கொடுத்திருந்தால்கூட எனக்கு சந்தோசமாக இருக்கும். தற்போது உள்ள நிலையில் அவரை வேறு மருத்துவமனைக்கு சேர்க்க வேண்டுமானால் மேலும் பணம் தேவைப்படும். அதற்கும் மருத்துவமனையில் நிர்வாகத்தினர் தடையாக உள்ளனர் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!