சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களா..? போலீசாரின் அதிரடி சோதனையால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Nov 15, 2022, 8:37 AM IST
Highlights

கோவை கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
 

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கார் வெடி விபத்து திட்டமிட்ட சதி என தெரியவந்தது. இதனையடுத்து கார் குண்டு விபத்தில் உயிர் இழந்த ஜமேஷா முபின் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் வெடி பொருட்களுக்கான வேதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை கைது செய்த போலீசார் உபா சட்டத்தில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கார் குண்டு விபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கும் தொடர்பு இருப்பதன் காரணமாக என்ஐஏக்கு இந்த வழக்கை மாற்றி தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதனையடுத்து என்ஐஏ போலீசார் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு 45 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது.

சென்னையில் போலீசார் சோதனை

இந்தநிலையில் தமிழக போலீசாரும் திருச்சி, மதுரை,நெல்லை, ராமநாதபுரம், சென்னை என பல்வேறு இடங்ளில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு தொடர்புடையவர்களாக இருப்பதாக சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தமிழக காவல்துறை நடத்திய சோதனையில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகத்திற்குரியவர்களின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் உள்ள செல்போன் எண்களை ஆய்வு செய்தனர்.

5 பேர் மீது புகார்

இதனிடையே ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் பண பரிவர்த்தனை மேற்கொண்டதாக 5 பேர் மீது புகார் எழுந்தது.மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின் படி சென்னை நகர் முழுவதும் காவல்துறையினர் தனியாக சோதனை நடத்தினர். இந்தநிலையில் தற்போது  கொடுங்கையூர், முத்தியால்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காலை முதலே போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொடுங்கையூரில் முகமது தப்ரீஸ் என்பவரின் வீட்டில், புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

திமுக அரசு தனது பழிவாங்கும் போக்கினை கைவிட்டு சவுக்கு சங்கரை ரிலீஸ் பண்ணுங்க.. ஆளுங்கட்சி மீது சீறும் சீமான்.!

click me!