எம்ஜிஆர் பாட்டை போடு... இல்லைன்னா குண்டு போடுவேன்... ரேடியோ ஸ்டேஷனுக்கு வந்த மிரட்டல்

By manimegalai aFirst Published Feb 25, 2022, 4:48 PM IST
Highlights
எம்ஜிஆர் என்ற சகாப்தம் மண்ணில் கலந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட அவருடைய புகழ் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கிறது..

 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளைப் போன்றே எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோதும், அவர் மறைந்தபோதும் அவருக்காக உயிரைக் கொடுக்கக்கூட தயங்காத பல லட்சம் ரசிகர்கள் இருந்தார்கள்.. இன்னும் இருக்கிறார்கள்.. இன்னுமா என்றால் ஆம்.. இன்னும் தான்.. ரேடியோவில் எம்ஜிஆர் பாட்டு போடவில்லை என்றால் பெட்ரோல் குண்டு வீசுவேன் என்று ஒரு எம்ஜிஆர் ரசிகர் ரேடியோ ஸ்டேஷனுக்கே லெட்டர் அனுப்பிய சம்பவம் தான் தற்போது கோவையின் ஹாட் டாபிக்...

கோவை திருச்சி ரோடு ராமநாதபுரத்தில் ஆல் இந்திய ரேடியோ நிலையம் உள்ளது. நேற்று இந்த ரேடியோ நிலையத்திற்கு ஒரு தபால் வந்தது. அந்த தபால் கார்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று ரஜினி பாடல்களை  ஒலிபரப்பியதாகவும்,ஆனால் எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று எம்ஜிஆர் பாடலை ஏன் ஒலிபரப்பவில்லை? இதனை கண்டித்து ரேடியோ நிலையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசுவோம் என்று அந்த தபால் கார்டில் எழுதப்பட்டுள்ளது .இந்த கார்டை பார்த்த ரேடியோ நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .போலீசார் விரைந்து வந்து அந்த கார்டை கைப்பற்றியதுடன் ரேடியோ நிலையத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர். தபால் கார்டு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தீவிர எம்ஜிஆர் ரசிகர் என்று கூறப்படுகிறது..

 மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் அங்கம் வகித்து வருபவை வானொலிகள். அதில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடல்களை கேட்டுக்கொண்டே தான் தங்கள் அலுவல்களையும் அன்றாட வேலைகளையும் கூலித்தொழிலாளி முதல் தொழிலதிபர்கள் வரை செய்து வருகிறார்கள். அப்படி மக்களின் வாழ்வியலோடு ஒருங்கிணைந்த ரேடியோ ஸ்டேஷனின் வெடிகுண்டு வீசப்படும் என்று மிரட்டுவது வேதனை ஏற்படுத்துவதாகவும் . சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளர்.

அதே போல எம்ஜிஆர் ரசிகர்கள் சிலர் கூறும் போது.., "எங்க தலைவர் இருக்கும் போது மக்களுக்கு நிறைய வாரி கொடுத்து வள்ளலாகதான் இருந்தாரு. எம்ஜிஆர் ரசிகர்னா எங்களுக்கு பெருமை.  அவர் மறைந்த பிறகு அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துற மாதிரி அவருடைய ரசிகர்கள் யாரும் நடந்துக்க மாட்டாங்க.. பெட்ரோல் குண்டு வீசுற அளவுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் மோசமானவங்க இல்ல.. எங்க தலைவர் எங்களை அப்படி வழிநடத்தவும் இல்ல.. இது வேற யாரோ செய்தவேலையென்றும் தேவையில்லாம எம்ஜிஆர் ரசிகர்னு சொல்லாதிங்க ' என்று ஆதங்கத்தோடு தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார் வயதான எம்ஜிஆர் ரசிகர் ஒருவர்.

 இருந்தாலும் எம்ஜிஆர் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக இதுபோன்ற செயல்களை யாரோ செய்திருக்கலாம் என தெரிவித்த காவல்துறையினர்,எம்ஜிஆர் ரசிகர்  என்று சொல்லப்படும் அந்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவவும் தெரிவித்துள்ளனர். நேற்று கோவையில் தியேட்டர்  முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 
 இந்த மிரட்டல்  தபால் கார்டு செய்தி வெளியே பரவியதால் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!