பேட்ட படம் பார்த்த ரஜினி ரசிகர் அடித்துக் கொலை !! உடுமலையில் பயங்கரம் !!

By Selvanayagam PFirst Published Jan 22, 2019, 12:28 PM IST
Highlights

உடுமலையில் பேட்ட திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது சிகரெட் பிடித்ததில் ஏற்பட்ட தகராறில் கட்டத் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. கட்டட தொழிலாளியான அவர் ஒரு ரஜினி ரசிகர். அண்மையில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் ரிலீசானது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி மணி கண்டபிரபு உடுமலை லதாங்கி தியேட்டரில் பேட்ட படம் பார்க்க சென்றார்.

தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த  மணிகண்ட பிரபு சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டு ரஜினியைப் போல் ஸ்டைலாக புகையை ஊதிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் இங்கு சிகரெட்  பிடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார்.

ஆனால் மணிகண்ட பிரபு, இது என் தலைவர் படம்.. அப்படித்தான் என் தலைவனைப் போல சிகரெட் பிடிப்பேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமான அந்த நபர், மணிகண்ட பிரபுவை வெளியே இழுத்துச் சென்று கட்டையால் அடித்துள்ளார்.

இதையடுத்து மணிகண்ட பிரபு தலையில் காயத்துடன் . திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார், பின்னர் அவர்  மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மணிகண்ட பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக  போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது தியேட்டரின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது தான் தியேட்டருக்குள் அடிதடி நடந்து தெரியவந்தது.

 

இதையடுத்து சிசிடிவி கேமரா உதவியுடன் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவர் திருமூர்த்தி என தெரியவந்தது. பின்னர் போலீசார் திருமூர்த்தியைக் கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

click me!