bridge stolen: பாலத்தை அலேக்காக கழற்றி செல்ல ஏதுவாக கேஸ் கட்டர்கள், பிக்கப் வேன்கள், எக்ஸ்கவேட்டர் என அனைத்து விதமான தொழில்நுட்ப உபகரணங்களுடன் கொள்ளையர்கள் வந்தனர்.
பீகாரில் 60 அடி பாலம் திருடப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. பாலம் திருடப்பட்ட வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த இருந்த அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் நீர்வளத் துறையை சேர்ந்த துணை அலுவலரை காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.
பாலம் திருட்டு:
கடந்த வாகம் பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமியவர் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரும்பு பாலம் ஒன்று பயன்படுத்தப்படாத நிலையில் இருந்துள்ளது. இதை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்த கயவர்கள், பாலத்தை அடியோடு ஆட்டையை போட திட்டமிட்டனர். அதன்படி யாருக்கும் சந்தேகம் ஏற்பட கூடாது என்பதற்காக அரசு அதிகாரிகள் போல் சம்பவ இடத்திற்கு கொள்ளையர்கள் வந்தனர்.
பாலத்தை அலேக்காக கழற்றி செல்ல ஏதுவாக கேஸ் கட்டர்கள், பிக்கப் வேன்கள், எக்ஸ்கவேட்டர் என அனைத்து விதமான தொழில்நுட்ப உபகரணங்களுடன் கொள்ளையர்கள் வந்தனர். அதன் பின், தொழில்நுட்ப உபகரணங்களை சரியாக பொருத்தி பாலத்தை கழற்றும் பணியினை தொடங்கினர். சுமார் மூன்று மணி நாட்கள் பாலத்துடன் போராடிய கொள்ளையர்கள் அதனை வெற்றிகரமாக பிரித்து எடுத்தனர்.
50 ஆண்டுகள் பழைய பாலத்தை அக்கு அக்காக பிரித்து எடுத்த கொள்ளையர்கள், மிக வேகமாக அங்கிருந்து கிளம்பி சென்றனர். பின் கழற்றி வந்த பாலத்தின் இரும்பு பாகங்களை ஸ்கிராப் முறையில் விற்று காசாக மாற்றினர். பட்டப்பகலில் இரும்பு பாலம் ஒன்றை கொள்ளையர்கள் மிக நேர்த்தியாக திருடி சென்ற சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
விடுப்பு:
பயனற்று கிடப்பதால், அரசு இந்த பாலத்தை கழற்றிவிட முடிவு செய்து இருக்கலாம் என உள்ளூர் கிராம மக்கள் நினைத்துள்ளனர். திருட்டு தொடங்கிய நாளில் பணி செய்தால், வேலைக்கு ஆபத்தாகி விடும் என்று நினைத்து துணை அதிகாரி அன்று ஒருநாள் மட்டும் உடல்நிலை சரியில்லை என கூறி விடுப்பு எடுத்து இருக்கிறார். பாலம் பிரித்து எடுக்கப்பட்ட சமயத்தில் அங்கு அரசு அதிகாரி ஒருவர் இருந்ததாக கூறப்படுகிறது.
விசாரணை:
பீகார் மாநிலத்தின் ரோட்டாஸ் மாவட்டத்தில் 60 அடி நீளம் கொண்டிருந்த இரும்பு பாலம் திருடு போன விவகாரத்தில் விசாரணை செய்து வந்த போலீசார், அரசு அதிகாரியான நீர்வளத் துறையில் பணியாற்றி வந்த துணை அலுவலருக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தினர். இதை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
"கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நீர்வளத் துறை துணை அலுவலர் உதவியோடு தான் கொள்ளையர்கள் பாலத்தை திருடி சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஜெ.சி.பி., சுமார் 247 கிலோ எடை கொண்ட இரும்பு சேனல்கள் மற்றும் இதர பொருட்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன," என்று போலிஸ் அதிகாரியான அசிஷ் பாரதி தெரிவித்தார்.