பசுபதி பாண்டியன் கொலையில் தொடர்புடைய நிர்மலா தேவி வெட்டிக் கொலை.. தலையை கையோடு எடுத்துச் சென்ற கும்பல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2021, 1:56 PM IST
Highlights

இந்தநிலையில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் வசித்த பகுதியில் வீடு வாடகைக்கு பிடித்து கொடுத்து உதவியதாக நந்தவனப்பட்டி நிர்மலா ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். 

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் நந்தவன பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி என்ற பெண் தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்து அந்த பெண்ணின் தலையை மட்டும் எடுத்துச் சென்ற கொலையாளிகள் பசுபதி பாண்டியன் வீட்டின் முன் வைத்து விட்டுச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து போலீஸ் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் பட்டப்பகலில் நடந்துள்ள இச்சம்பவத்தால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதிபாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், புறா மாடசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துப்பாண்டி , நிர்மலா உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் புறா மாடசாமி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 4 பேர் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்களில் வெவ்வேறு சம்பவங்களில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் வசித்த பகுதியில் வீடு வாடகைக்கு பிடித்து கொடுத்து உதவியதாக நந்தவனப்பட்டி நிர்மலா ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை வாய்தா 18.10.2021 அன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் வர உள்ளது . 

இந்நிலையில் நிர்மலா இன்று திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஈபி கலனி ரோடு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு பணிகளை பிரித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் நிர்மலாவை பயங்கர ஆயுதங்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்து தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்றனர். பின்னர் கொலையாளிகள் வெட்டப்பட்ட தலையை பசுபதிபாண்டியன் நந்தவனப்பட்டியில் கொலை செய்யப்பட்ட அவரது வீட்டில், அவரது பிளக்ஸ் பேனர் அருகே வைத்து விட்டு சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!