பவுன்தாய் பிரபுவிடம் பல முறை நேரிலும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு வட்டித்தொகையைத் தருமாறு கேட்டபோதும் பிரபு அவரை அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவுன்தாய் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரபுவின் வீட்டிற்கு சென்று அசலையும், வட்டியையும் உடனடியாக தர வேண்டும் என்று கூறி அவரது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
கொடுத்த கடனை திருப்பி கேட்ட 55 வயது மூதாட்டியை சரமாரியாகக் குத்தி படுகொலை செய்த கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வட்டி தொழில்
தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனியில் உள்ள அமராவதி நகரைச் சேர்ந்தவர் பவுன்தாய் (55). இவரது கணவர் ராமராஜ் உயிரிழந்துவிட்டார். மூத்த மகன் லோகேஷ்குமார் சென்னையில் பணிபுரிந்து. பவுன்தாய் தனது இளையமகன் வினோத்குமாருடன் அமராவதி நகரில் வசித்து வருகிறார். மேலும் தனது வருமானத்திற்காக வட்டிக்கு விடும் தொழிலையும் செய்து வந்தார்.
தகாத வார்த்தைகளால் மிரட்டல்
இந்நிலையில், அமராவதி நகர் அருகே உள்ள ஜக்கப்பநாயக்கனூரைச் சேர்ந்த பிரபு(30). திருமணமாகாத இவர் கட்டிடத் தொழில் செய்து வருகிறார். பிரபு பவுன்தாயிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் வட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பணம் வாங்கிய நாள் முதல் வட்டித் தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பவுன்தாய் பிரபுவிடம் பல முறை நேரிலும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு வட்டித்தொகையைத் தருமாறு கேட்டபோதும் பிரபு அவரை அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவுன்தாய் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரபுவின் வீட்டிற்கு சென்று அசலையும், வட்டியையும் உடனடியாக தர வேண்டும் என்று கூறி அவரது குடும்பத்தாரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
படுகொலை
இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு நேற்று இரவு கத்தியுடன் பவுன்தாயின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்துவிடுவேன் என்று பவுன்தாயை மிரட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரிடமிருந்து கத்தியை பறித்த பவுன்தாய் பிரபுவின் கையில் கத்தியால் கீறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியதால் பிரபு பவுன்தாயின் கையில் இருந்த கத்தியை மறுபடியும் பறித்து, அவரின் கழுத்து, காது, கண், முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.
கைது
இதனால் பவுன்தாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது பிரபு அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பவுன்தாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கொலை சம்பவம் தொடர்பாக பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.