தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேர் அதிரடி கைது..! காவல்துறை நடவடிக்கை..!

By Manikandan S R SFirst Published May 21, 2020, 1:42 PM IST
Highlights

அரசு அறிவுறுத்தலை மீறி பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அவர்களை கைது செய்யும் போலீசார் வழக்கு பதிந்து தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 5,03,689 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது 4ம் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் மக்கள் கடைகள் போன்றவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கூட கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமெனவும் அத்தியாவசிய தேவைகள் அன்றி பிற காரியங்களுக்கு எக்காரணம் கொண்டும் வெளியே சுற்றித்திரிய கூடாது என அரசு எச்சரித்து இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உணவகங்களை தவிர்த்து பிற கடைகள் அனைத்தும் மாலை 7 மணிக்கு அடைக்கப்பட வேண்டும் எனவும் தேவையின்றி வாகனங்களில் செல்லக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு அறிவுறுத்தலை மீறி பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அவர்களை கைது செய்யும் போலீசார் வழக்கு பதிந்து தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் 5,03,689 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 4,85,081 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 4,10,110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,70,63,404 அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக சென்று மக்களுக்கு பாதிப்பை எடுத்துக் கூறி அவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதால் நிகழப்போகும் அபாயங்களையும் கூறி அறிவுறுத்தி வருகின்றனர்.

click me!