தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி அட்டகாசம்..! 4.15 கோடி அபராதம் வசூல்..!

By Manikandan S R SFirst Published May 5, 2020, 1:46 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சத்து 16 ஆயிரத்து 344 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆகியுள்ளனர். அவர்கள் மீது 3 லட்சத்து 93 ஆயிரத்து 463 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 3 லட்சத்து 48 ஆயிரத்து 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சுமார் 4.15 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க அரசு அறிவித்திருக்கிறது. எனினும் தற்போது தடை உத்தரவில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாதிப்புகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் கட்டுப்பாடுகளுடன் மக்கள் பணிகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த அத்தியாவசிய தேவைகளை மீறி மக்கள் வெளிவர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு அறிவுறுத்தலை மீறி பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். ஊரடங்கு தற்போது மூன்றாவது முறையாக அமலாகி இருக்கும் நிலையில் கொரோனாவின் தீவிரத்தை இன்னும் பலர் உணராமல் சாலைகளில் திரிகின்றனர். அவர்களை கைது செய்யும் போலீசார் வழக்கு பதிந்து தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சத்து 16 ஆயிரத்து 344 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆகியுள்ளனர். அவர்கள் மீது 3 லட்சத்து 93 ஆயிரத்து 463 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 3 லட்சத்து 48 ஆயிரத்து 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சுமார் 4.15 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். வீதி வீதியாக சென்று மக்களுக்கு பாதிப்பை எடுத்துக் கூறி அவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதால் நிகழப்போகும் அபாயங்களையும் கூறி அறிவுறுத்தி வருகின்றனர்.

click me!