ஊரடங்கை மீறி ஊர் சுற்றி அட்டகாசம்..! 38 ஆயிரம் பேர் கைது..! 14 லட்சம் அபராதம் வசூலிப்பு..!

By Manikandan S R SFirst Published Apr 2, 2020, 11:58 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் 38 ஆயிரத்து 387 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது 34 ஆயிரத்து 178 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நாட்களில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க அரசு அறிவித்திருக்கிறது.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளிவர வேண்டும் என்றும் அதை தவிர்த்து பிற காரியங்களுக்கு எக்காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது என அரசு எச்சரித்து இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு அறிவுறுத்தலை மீறி பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அவர்களை கைது செய்யும் போலீசார் வழக்கு பதிந்து தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 38 ஆயிரத்து 387 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது 34 ஆயிரத்து 178 வழக்குகள் போடப்பட்டுள்ளது. சுமார் 28 ஆயிரத்து 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14.48 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக சென்று மக்களுக்கு பாதிப்பை எடுத்துக் கூறி அவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதால் நிகழப்போகும் அபாயங்களையும் கூறி அறிவுறுத்தி வருகின்றனர்.

click me!