தைரியம் அடைந்த ராஜேஷ் பணம் கொடுத்து ஏமாந்த பெண்ணை செல்போனில் மிரட்டி உள்ளார். நான் உதயநிதி ஸ்டாலினுடைய பி.ஏ. என்ன ஒன்னும் செய்ய முடியாது. எங்கிட்ட தினமும் 1008 போலீஸ்காரன் பேசுறான். நீ எங்க போனாலும் உனக்கு தான் ஆபத்து ராஜேஷ் மிரட்டிய ஆடியோ வைரலானது.
உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என கூறிக் கொண்டு பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் புதூர் பகுதியை சேர்ந்த தேன்மொழி (32) எம்.எஸ்.டபள்யூ பட்ட படிப்பை முடித்த இளம்பெண் சென்னையில் வேலை தேடி சென்றுள்ளார். அப்போது தோழியின் மூலமாக அறிமுகமான சென்னை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கு பெரிய பெரிய இடத்தில் எல்லாம் தொடர்பு உள்ளது என்று ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் கடந்த 2018 ம் ஆண்டு சுமார் 4.50 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால் சொன்னது போல் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தேன்மொழி, ராஜேஷிடம் வேலை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், செய்வதறியாமல் திகைத்து போன ராஜேஷ் இன்னும் சிலரை சேர்த்துவிட்டால் அந்த துறையை நிரப்பிவிடலாம் என்கிறார்கள். அதனால் உனக்கு தெரிந்த ஆட்களிடம் அரசு வேலைக்கு பணம் கேள், அவர்கள் கொடுத்தால் மொத்தமாக சேர்ந்து பணி நியமன ஆணையை வாங்கித் தருகிறேன் என மீண்டும் ஒரு பொய் கூறியுள்ளார்.
இதையும் நம்பிய தேன்மொழி தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை வாங்கி ராஜேஷிடம் கொடுத்துள்ளார். எனினும் யாருக்கும் வேலை வாங்கித் தராமல் ராஜேஷ் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் தேன்மொழியிடம் பணம் கொடுத்தவர்கள் அவரை வேலை கேட்டும் இல்லாவிட்டால் பணத்தையாவது திரும்ப தருமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து ராஜேஷ் பணத்தையும் கொடுக்க மறுத்து வேலையையும் கொடுக்க மறுத்ததால் வேறு வழியில்லாமல் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேன்மொழி அளித்த புகாரை சம்மந்தபட்ட கந்திலி காவல் நிலையத்திற்கு அனுப்பி உள்ளனர்.
அப்போது விசாரணைக்காக ராஜேசை அழைத்த சீனிவாசன் என்ற போலீஸ்காரர் ராஜேஷிடம் நெருங்கி பழக ஆரம்பித்து பணத்திற்கு அடிமை ஆகியுள்ளார். இதனால் தேன்மொழி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏலகிரி மலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று கையூட்டு பெற்று கொண்டு விசாரணையை கிடப்பில் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தைரியம் அடைந்த ராஜேஷ் பணம் கொடுத்து ஏமாந்த பெண்ணை செல்போனில் மிரட்டி உள்ளார். நான் உதயநிதி ஸ்டாலினுடைய பி.ஏ. என்ன ஒன்னும் செய்ய முடியாது. எங்கிட்ட தினமும் 1008 போலீஸ்காரன் பேசுறான். நீ எங்க போனாலும் உனக்கு தான் ஆபத்து ராஜேஷ் மிரட்டிய ஆடியோ வைரலானது.
இதையடுத்து ராஜேஷை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் இல்லை என்றும் உதயநிதிக்கு உதவியாளர் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போன்று வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்திலும் ராஜேஷிடம் பல பேர் பல லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது.