சேர்ந்து வாழ மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாமியாரைக் கொடூரமாக கொன்ற மருமகன்.. சேலத்தில் பயங்கரம்!!

By Asianet TamilFirst Published Sep 24, 2019, 4:02 PM IST
Highlights

சேலம் அருகே குடும்பத் தகராறில் மருமகனே மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த பாப்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் பேபி. இவரது மகள் தீபா. பேபியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் பேபி தனது மகள் தீபாவை வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

திருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து தீபா வாழ்ந்து வந்துள்ளார். தீபாவிற்கும் அவரது கணவர் கணபதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கணவரை விட்டு பிரிந்து தீபா தனது தாயார் பேபியின் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அங்கிருந்து பள்ளிபாளையத்தில் இருக்கும் ஒரு தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே தீபாவின் கணவர் கணபதி தனது மாமியார் வீட்டிற்கு வந்து தீபாவை அவருடன் சேர்ந்து வாழ அனுப்பி வைக்கும்படி பேபியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு பேபி மறுத்ததாக தெரிகிறது. இதனால் பேபி மீது அவரது மருமகன் கணபதி ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.

சம்பவத்தன்று அதிகாலை பேபி வீட்டிற்கு மீண்டும் கணபதி வந்துள்ளார். அப்போது அவரது மனைவி தீபா வேலைக்கு சென்றிருக்கிறார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பேபியை கழுத்தை நெரித்து கணபதி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.

வேலை முடிந்து வந்த தீபா, தனது தயார் பேபி இறந்து கிடப்பதை பார்த்து கதறி துடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் சங்ககிரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் பேபியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீபா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கணபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!