பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவை மாவட்ட எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் இந்த வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஸ்,சபரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு முதலில் சிபிசிஐடிக்கும் பின்னர் சிபிஐக்கும் மாற்றப்பட்டது. இந்த மாற்றம் தொடர்பான அரசு உத்தரவில் முதன் முதலில் இது தொடர்பாக புகார் கொடுத்த பெண் மற்றும் அவரின் சகோதரர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவ்ட்ட எஸ்பி.பாண்டியராஜன் வழக்கின் ஆரம்பத்திலேயே இந்த வழக்கில் நான்கு பேருக்குத்தான் தொடர்பு உள்ளதாக கூறியதற்கு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பான அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை குறிப்பிட்டதை கண்டித்து அந்த பெண்ணிற்கு 25 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
இது தவிர அந்தப் பெண்ணின் பெயரை நீக்கிவிட்டு புது அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.