
மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் 100 கோடி ரூபாய் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர உதவியாக இருந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மேற்கு மாம்பலத்தில் பல ஆண்டுகளாக ராம் சமாஜ் அமைப்பின் கீழ் அயோத்தியா மண்டபம் இயங்கி வந்தது. இந்நிலையில் அந்த அமைப்பின் மீது பல்வேறு புகார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வந்தது. அதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராம் சமாஜ் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் ராம் சமாஜ் அமைப்பு அயோத்தியா மண்டபத்தில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஊழலில் ஈடுபட்டிருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களும் வெளியானது. இதனையடுத்து ராம் சமாஜ் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிக்க தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அயோத்தியா மண்டபத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் அதற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அறநிலைத் துறை அதிகாரிகளை அயோத்தியா மண்டபத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர் பின்னர் போலீசார் வந்து அவர்களை கலைத்தனர். அதுமட்டுமின்றி அயோத்தியா மண்டபம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் ராம் சமாஜ் அமைப்பின் 100 கோடி முறைகேடு தொடர்பான தவறுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சமூக ஆர்வலர் எம். வி ரமணி என்பவருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறுஞ்செய்தி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
குறிப்பாக எம். வி ரமணிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய செல்போன் எண்ணைப் ட்ராக் செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் மகேஷ் என்பதும், அவர் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் அசோக்நகர் போலீசார் மகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் மகேஷ் அயோத்தியா மண்டபத்தில் நீண்ட காலமாக உணவு காண்ட்ராக்டராக இருந்து வந்தவர் என்பது தெரியவந்தது அயோத்தியா மண்டபம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதால், இனி தனக்கு உணவு ஆர்டர் கிடைக்காது என்ற ஆத்திரத்தில் சமூக ஆர்வலர் ரமணிக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.