காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை.. மகன் இறந்தது கூட தெரியாத தாய்.. அனாதையாக கிடைக்கும் மோகனின் உடல்.!

By vinoth kumarFirst Published Jun 15, 2022, 10:11 AM IST
Highlights

 சரண்யாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மோகன் உடலை வாங்க உறவினர்கள் வரவில்லை. அதாவது அவருக்கு நெருங்கிய சொந்தம் என கூறி யாரும் வரவில்லை. அவரது தாயும் மனநல சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு என்ன நடந்தது என கூட தெரியாது.

காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மகன் இறந்தது கூட தெரியாத தாய் சிகிச்சை பெற்று வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் திருமணம்

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது சகோதரி சரண்யா செவிலியராக வேலைப்பார்த்து வந்தார். இவருக்கும் உறவினரான ரஞ்சித்குமார் என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு வீட்டில் முடிவு செய்துள்ளனர். சரண்யா ஏற்கனவே மோகன் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரிந்தும், ரஞ்சித்குமாரை கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றதால் வீட்டைவிட்டு வெளியேறி, காதலன் மோகனைத் திருமணம் செய்துகொண்டார். 

விருந்துக்கு அழைத்து படுகொலை

இருவரும் வேறு சாதி என்பதால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில் சரண்யாவின் அண்ணன் விருந்துக்கு அழைப்பது போல் நைசாக பேசி இருவரையும் வீட்டுக்கு வரழைத்து வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவ தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேல், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மகன் இறந்தது கூட தெரியாத தாய்

இந்நிலையில் சரண்யா, மோகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சரண்யாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மோகன் உடலை வாங்க உறவினர்கள் வரவில்லை. அதாவது அவருக்கு நெருங்கிய சொந்தம் என கூறி யாரும் வரவில்லை. அவரது தாயும் மனநல சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு என்ன நடந்தது என கூட தெரியாது. இதையடுத்து, அவரது உடலை வாங்குவதற்காக கிராம நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் கும்பகோணம் விரைந்துள்ளனர். 

click me!