
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பாச்சலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்தியராஜ். இவரது மகள் பிரித்திகா (வயது 9) அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பபள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15-ந் தேதி மாணவி பள்ளி வளாகத்திற்குள் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் சிறுமி உயிரிழந்து 2 வாரத்துக்கும் மேலாக எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். தென்மண்டல சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி முத்தரசி தலைமையில் போலீசார் 5 குழுக்களாக பிரிந்து பள்ளியின் சுற்று வட்டாரப்பகுதிகளை கண்காணித்தும், பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், துப்பரவு ஊழியர், சத்துணவு பெண் பணியாளர் மற்றும் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள், மற்றும் சிறுமியின் பெற்றோர், பள்ளி அருகே வசிக்கும் மக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமி உயிரிழந்த நாளன்று பள்ளிக்கு வருகை புரிந்த தலைமையாசிரியர் முருகன், இடைநிலை ஆசிரியர் மணிவேல் ராஜ், பட்டதாரி ஆசிரியர் ராஜா துரை ஆகிய மூவரையும் மேல்மலை கிராமமான கிளாவரை, பூண்டி, பழம்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பணி மாற்றம் செய்து இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை பணிமாற்றம் செய்த 3 ஆசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.