
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வயதான முதியவர் ஒருவர் தனது மகன் உள்பட மூன்று குடும்ப உறுப்பினர்களை வீட்டினுள் அடைத்து, வீட்டிற்கு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சொத்து தகராறு காரணமாக முதியவர் வீட்டிற்கு தீ வைத்த நிலையில், வீட்டினுள் இருந்த முதியவரின் மகன் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை அரங்கேறியதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
குற்றவாளியின் மகன், பேரன் மற்றும் பள்ளி மாணவர்களான இரண்டு பேத்திகள் வீட்டினுள் உறங்கி கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் வீடு கொழுந்து விட்டு எரிந்ததில், நான்கு பேரும் உடல் கருகி பலியாகினர் என தனியார் செய்தி நிறுவனத்திடம் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
பெட்ரோல் வெடிகுண்டு:
79 வயதான ஹமீத் முதலில் மகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு கதவை வெளிப்புறமாக அடைத்து விட்டார். பின் காலி பாட்டில்களினுள் பெட்ரோலை நிரப்பி, அதில் தீவைத்து ஜன்னல் வழியாக பாட்டில்களை வீட்டினுள் வீசி எறிந்துள்ளார். இவ்வாறு செய்ததில், வீடு தீப்பிடித்து எறிய துவங்கியது. பின் மளமளவென வீடு முழுக்க தீப்பிடித்து எரிந்தது.
வீட்டில் தீ எரிவை கவனத்த குடும்ப உறுப்பினர்கள், உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். எனினும், உதவிக்கு ஆட்கள் வருவதற்குள் வீடு முழுக்க தீப்பிடித்து எறிய தொடங்கி விட்டது. இதனால் யாராலும் வீட்டினுள் சென்று, அதனுள் இருப்பவர்களை மீட்ரவோ, தீயை அணைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
போலீஸ் விசாரணை:
ஹமித் வீட்டை தீ வைத்து எரிக்கும் காட்சியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பார்த்து இருக்கிறார். தீ வைத்து எரித்த ஹமீத்தை போலீசார் கைது செய்துள்ளனர். "ஐந்து காலி பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி, ஹமீத் வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். எனவே இது திட்டமிட்டு நடைபெற்ற கொலை தான். மேலும் அருகாமையில் இருப்பவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சிக்க கூடாது என்பதற்காக பக்கெட் மற்றும் கயிறு உள்ளிட்டவைகளை ஹமீத் தூக்கி வீசி எறிந்திருக்கிறார்," என மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"வழக்கின் விசாரணைக்காக உடல்களை பிரிப்பது மிகவும் கடினமாகி இருக்கிறது," என போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார். வீட்டினுள் தந்தை தனது இளம் மகளை கட்டியணைத்தப்படி உயிரிழந்து கிடக்கும் சடலங்களை பார்த்ததும், இதயம் நொருங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விசாரணையில், தனது மகனுடன் சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாகவே இந்த குற்றத்தை தான் செய்ததாக ஹமீத் ஒப்புக் கொண்டுள்ளார்.