ஆட்டுக்கால் பாயா போட்டு 6 பேரை கொன்ற பெண் ! 17 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!

By Selvanayagam PFirst Published Oct 5, 2019, 11:46 PM IST
Highlights

கேரளாவில் சொத்துக்காக  ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை உறவுக்காரப் பெண் ஒருவரே விஷம் வைத்துக் கொன்ற உண்மை 17 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ளது.
 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தொரை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவரது மனைவி அன்னம்மாள். ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் ரோய் தாமஸ். அன்னம்மாளுடன் அவரது சகோதரர் மேத்யூ மற்றும் ஜான் தாமசின் சகோதரரின் மருமகள் பீலி. இவரது 1 வயது மகன் அல்பேன் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இவர்கள் 6 பேரும் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறந்தனர். ஆனால் அனைவரது மரணமும் ஒரே மாதிரியாக இருந்தது. 

ஆனால், அவர்களது உடல்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களின் மரணம் சாதாரணமானது என கூறினர். இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் அவர்கள் 6 பேர் சாவிலும் மர்மம் இருப்பதாக அந்த குடும்பத்தை வேண்டிய உறவினர்கள் போலீசாரிடம் கூறி வந்தனர். ஆனால் அதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அந்த புகார் குறித்து விசாரிக்காமல் விட்டு விட்டனர்.

இதுதொடர்பாக இறந்தவர்களின் குடும்பத்துக்கு வேண்டியவர்கள் உயர்காவல்துறை அதிகாரிகளிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர். உறவினர்களின் தொடர் வலியுறுத்தலால் போலீசார் அவர்களது உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். 

அதன்படி போலீசார் 17 வருடங்களுக்கு பின் அவர்களது உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று 6 பேரின் உடல்களை தோண்டி எடுத்தனர். பின்னர் அவற்றில் இருந்த எலும்பு கூடுகள், உடல் பாகங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அவர்களது உடல்களில் விஷம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கல்வி அதிகாரியின் உறவுக்கார பெண் ஜோலி என்பவர்  சொத்துக்காக ஆட்டுக்கால் பாயாவில் விஷம் வைத்து அவர்களை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து  தனி வீட்டில் பதுங்கியிருந்த ஜோலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

click me!