சக்திக்கு சில பெண்களுடன் காதல்கள் இருந்தது... சில போக்குகள் இருந்திருக்கிறது... தெரிந்தே நான் காதலித்தேன்! கௌசல்யா விளக்கம்

By sathish kFirst Published Jan 2, 2019, 10:35 AM IST
Highlights

சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது; சில போக்குகள் இருந்திருக்கிறது;தெரிந்தே நான் விரும்பியதும், திருமணம் செய்துகொண்டதும்  நான் செய்தது தவறு என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன் என கவுசல்யா விளக்கம் அளித்துள்ளார்.

காதல் கணவரை பறிகொடுத்த கவுசல்யா,  கோவையில் ‘நிமிர்வு கலையகம்’ என்ற பறை இசை பயிற்சி அமைப்பின் பொறுப்பாளரான சக்தி என்பவரிடம் பறை இசை கற்றுவந்த சமயத்தில், அவரையே காதலித்து கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மறுமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியது உட்பட சக்தி மீது பல்வேறு பாலியல் புகார்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டன. சக்தி பற்றி தெரிந்திருந்தும் அவரை கண்டிக்காமல் கல்யாணம் செய்துகொண்டார் என்று கௌசல்யா விமர்சிக்கப்பட்டார்.

இந்நிலையில், சக்தி மீதான புகார்கள் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்குப்பின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கௌசல்யா நீதிக்காக நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களோடு சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கௌசல்யா காலமெல்லாம் கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை. அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடில்லை. ஆனால் சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகும்.

இதுகுறித்து கௌசல்யா கூறியிருப்பதாவது; தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் என் மீது சொல்லப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன். மற்ற அவதூறுகளை மறுக்கிறேன். 6 மாத கருக்கலைப்பு என்பதும் அதற்கு நான்தான் காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை. இது தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

என்னுடைய பிழை என்பது, சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது; சில போக்குகள் இருந்திருக்கிறது;தெரிந்தே நான் விரும்பியதும், திருமணம் செய்துகொண்டதும் மட்டும்தான். இந்த அடிப்படையில் நான் செய்தது பிழை என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். நானும் சக்தியும் கருக்கலைப்புக்கு பொறுப்பு அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன் இவ்வாறு கௌசல்யா கூறியுள்ளார்.

click me!