சூர்யா பட பாணியில் தங்கம் கடத்தல்.. டெல்லி விமான நிலையத்தில் வசமாக சிக்கிய நபரால் பரபரப்பு...!

By Kevin KaarkiFirst Published Apr 21, 2022, 10:53 AM IST
Highlights

அபு தாபி விமானத்தில் இருந்து இறங்கியதை அடுத்து, அதிகாரிகள் இவரை தேடி வந்துள்ளனர். அதன் பின் இவரை பிடித்து விசாரணை செய்ததில், இவர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 

அயன் திரைப்பட காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் போது தனது தலையின் மேல் தோப்பா முடியின் கீழ் வைர கற்களை ஒட்டிக் கொண்டு வருவார். இதே பாணியில் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற நபரை டெல்லி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனர். 

சொட்டை தலையின் மீது உருக்கப்பட்ட தங்கத்தை ஒட்டிக் கொண்டு வந்த நபரை டெல்லி கஸ்டம்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தங்கம் கடத்தி வந்த நபர் அபு தாபி விமானத்தில் இருந்து இறங்கியதை அடுத்து, அதிகாரிகள் இவரை தேடி வந்துள்ளனர். அதன் பின் இவரை பிடித்து விசாரணை செய்ததில், இவர் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 

இவரிடம் இருந்து 630 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதை அடுத்து சுகங்கத் துறை அதிகாரிகள் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் காரணமாக கடத்தி வருவோரின் சமீபத்திய முயற்சியாக இது அமைந்து இருக்கிறது. 

தங்கம் கடத்தல்:

டெல்லி, மும்பை மற்றும் கேரளா விமன நிலையங்களில் அரபு நாடுகளில் இருந்து திரும்புவோரிடம்  இருந்து இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகள் சாதாரண நிகழ்வாக இருக்கிறது. முன்னதாக ஜூசர், பெல்ட், மொபைல் போன் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் தங்கத்தை மறைத்து வைத்து, இந்தியா வந்த பலர் சுங்கத் துறையிடம் வசமாக சிக்கி இருக்கின்றனர். 

கடந்த ஆண்டு இதேபோன்று தோப்பாவின் கீழ் தங்கம் வைத்து கடத்த முயன்ற எட்டு பேர் சென்னை  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 11 ஆண்டுகளில் டெல்லி சுங்கத் துறை சார்பில் 2500 வழக்குகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சுங்கத் துறை கமிஷனர் தெரிவித்து இருக்கிறார். 

சரியான வழிமுறை:

விமானங்களில் தங்கம் எடுத்து வருவது சட்ட விரோத நடவடிக்கை இல்லை. எனினும், பயணிகள் எவ்வளவு தங்கத்தை எடுத்து வருகின்றனர், எதற்காக அவற்றை எடுத்து வருகின்றனர் என்ற காரணத்தோடு எடுத்து வரும் தங்கத்திற்கு முறையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 

வெளநாடுகளில் இருந்து இந்தியா வரும் ஆண்கள் அதிகபட்சமாக 20 கிராம் வரையிலான தங்கத்தை சுங்க வரி இல்லாமல் கொண்டு வர முடியும். இதே போன்று பெண்கள் அதிகபட்சமாக 40 கிராம் வரையிலான தங்கத்தை எடுத்து வரலாம். இதற்கு சுங்க வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது இல்லாமல் அதிக அளவு தங்கத்தை இந்தியா கொண்டு வருவோர், அதுபற்றி முறையான தகவலை எல்லை கட்டுப்பாட்டு பிரிவில் தெரிவித்து, சரியான இறக்குமதி வரியை செலுத்துவது அவசியம் ஆகும். 

click me!