
சிவகங்கை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி மண்வெட்டியால் சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிகரை கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி - அன்னலட்சுமி தம்பதி. இவர்களுக்கு தயாநிதி, வித்திஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அன்னலட்சுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக கணவருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கணவர் வீராச்சாமி மனைவி அன்னலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால், குழந்தைகளை தவிக்கவிட்டுட்டு அன்னலட்சுமி தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து, வீராச்சாமி தனது 2 மகன்கள் மற்றும் மாமனார், மாமியாருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அன்னலட்சுமி, கள்ளக்காதலனுடன் நேற்று தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து, அவர்களிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.
அந்த சமயம் வீராச்சாமியும் அங்கிருந்ததால் அவருக்கும் அன்னலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வீராச்சாமி, மண்வெட்டியால் அன்னலட்சுமியை சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அன்னலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வீராச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.