கணவனை கொலை செய்து புதைத்து, கேரளாவில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனை கொலை செய்து புதைத்து, கேரளாவில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் லியோபால்( 33). இவரது மனைவி சுஜித்ராமேரி (24). 2 குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த லியோபால் நண்பரான ராதாகிருஷ்ணன் (20) என்பவர் திண்டிவனத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், ராதாகிருஷ்ணனுக்கும் சுஜிதாமேரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் நாளடைவில் கணவர் லியோபாலுக்கு தெரிய வந்ததையடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி 4ம் தேதி சுஜித்ராமேரி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, இரும்பு கம்பியால் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தோட்டத்தில் புதைத்தார். பின்னர், குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதல் ஜோடி தலைமறைவானார். லியோபாலின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த லியோபால் சடலத்தை, மார்ச், 3ம் தேதி தோண்டி எடுத்தனர். பின்னர், கள்ளக்காதல் ஜோடியை தேடிவந்தனர்.
இந்நிலையில், கேரளாவில் இருக்கும் உறவினர் வீட்டில் ராதாகிருஷ்ணன் சுஜிதாமேரி இருப்பது தெரியவந்தது. இதனை செல்போன் நெட்வொர்க் கவரேஜ் மற்றும் செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் உறுதிப்படுத்தி அவர்களை கைது செய்தனர்.
பின்னர், விக்கிரவாண்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, விசாரணை செய்தனர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன் ராதாகிருஷ்ணன், லியோபால் மற்றும் அவர்களது நண்பர் ஒருவர் என 3 பேர் மது குடித்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராதாகிருஷ்ணன் மற்றும் லியோபால் சேர்ந்து அவரது நண்பரை கொலை செய்து உடலை புதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கொலை செய்யப்பட்டவர் யார் எங்கு புதைத்தார்கள் என்பது குறித்து ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தற்போது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.