ஏடிஎம் இயந்திரத்துக்கே தெரியாமல் நூதன முறையில் திருட்டு... வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியது எப்படி?

By Kanimozhi PannerselvamFirst Published Jun 22, 2021, 4:43 PM IST
Highlights

டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் இருசக்கர வாகனத்தை வாடிக்கைக்கு எடுத்த இவர்கள் சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் வளசரவாக்கம், தரமணி, விருகம்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, கீழ்பாக்கம், பெரிய மேடு, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  பணம் டெபாசிட் செய்யும் எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் ரூ.20 லட்சம் வரை பணம் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

எஸ்.பி.ஐ. வங்கியின் கேஷ் டெபாசிட் மெஷினில் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பின் நம்பர் செலுத்தினால், பணமானது வெளியே வரும். அவ்வாறு ஏ.டி.எம் மிஷினில் இருந்து வெளிவந்த பணத்தை 20 நொடிகளுக்குள் எடுக்கவில்லை எனில் மீண்டும் பணம் மெஷினுக்கு உள்ளேயே திரும்பிவிடும். 

இந்த தொழில்நுட்பத்தை அறிந்த கொள்ளையர்கள் பணம் மெஷினில் இருந்து வெளிவந்தவுடன், 20 நொடிகளுக்குள் பணத்தை எடுக்காமல் இருந்துள்ளனர். அதன்பின் பணம் மீண்டும் மெஷினுக்குள் செல்வதற்குள்ளாக, பணம் வெளியே வரும் அந்த வாயில் பகுதியில் ஷட்டரையும், சென்சாரையும் விரல்களை வைத்து தடுத்து நிறுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு செய்தால் பணத்தை எடுக்கவில்லை என நினைத்து வங்கி கணக்கிலேயே மீண்டும் அந்த தொகை வரவு வைக்கப்படும். இந்த தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் கைவரிசையக் காட்டியுள்ளது. 

இந்த கொள்ளை கும்பல் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் இருசக்கர வாகனத்தை வாடிக்கைக்கு எடுத்த இவர்கள் சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.ஐ. பணம் டெபாசிட் செய்யும் மெஷினில் மட்டுமே கொள்ளையர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டியுள்ளதால், அந்த வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 


தெளிவாக திட்டமிட்டு கொள்ளையடித்த டெல்லி கொள்ளை கும்பல் தற்போது ஹரியானா தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பிய கொள்ளை கும்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  
 

click me!