கர்ப்பிணி மகள் மீது ஆசிட் வீசிய கொடூர தந்தை..! காதல் திருமணத்தால் வெறிச்செயல்..!

By Manikandan S R SFirst Published Feb 1, 2020, 10:30 AM IST
Highlights

தந்தையுடன் 4 குண்டர்கள் வந்திருப்பதை பார்த்து சந்தேகமடைந்த தீபிகா அவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார், தான் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் வீசினார்.

திருவள்ளூர் அருகே இருக்கும் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இந்த தம்பதியினருக்கு சாய்குமார்(24) என்கிற மகன் இருக்கிறார். இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் பாலகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற காவலரான இவருக்கு தீபிகா என்கிற மகள் இருக்கிறார். இந்தநிலையில் தீபிகாவிற்கும் சாய்குமாருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

6 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததை அறிந்த பாலகுமார், வீட்டை காலி செய்து விட்டு திருத்தணிக்கு மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அங்கு தீபிகாவை கல்லூரியில் சேர்த்ததுடன் யாரிடமும் பேசாதவாறு சித்தரவதை செய்திருக்கிறார். இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய தீபிகா பெங்களூரு சென்று சாய்குமாரை திருமணம் செய்தார். கடந்த ஜூன் முதல் அங்கு வாழ்ந்து வந்த அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன் திருவள்ளுர் திரும்பினர். தற்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

மகள் திருவள்ளுர் வந்திருப்பதை அறிந்த பாலகுமார் அவரை பார்க்க சென்றுள்ளார். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் வீட்டிற்கு பார்க்க வருமாறும் அழைத்திருக்கிறார். தந்தையுடன் 4 குண்டர்கள் வந்திருப்பதை பார்த்து சந்தேகமடைந்த தீபிகா அவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார், தான் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் வீசினார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மாமியார் பாக்கியலட்சுமியும் மற்றொரு மருமகள் திவ்யாவும் தடுத்துள்ளனர். அவர்களையும் தாக்கி அமிலத்தை பூசியிருக்கிறார் பாலகுமார்.

இதனிடையே மயக்கமடைந்த தீபிகாவை காரில் கடத்திச்சென்ற நிலையில் சாய்குமார் காவல்துறையில் புகார் அளித்தார். காவலர்கள் தேடுவதை அறிந்த பாலகுமார், தீபிகாவை நள்ளிரவில் திருவள்ளுர் சாலையில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றார். இதையடுத்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கர்ப்பிணி மகள் மீது அமிலத்தை பூசி வெறிச்செயல் புரிந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: ஆதிபாட்டன் சிவனுக்கு குடமுழுக்கு..! தாறுமாறாக கொண்டாட்டத்திற்கு அழைக்கும் சீமான்..!

click me!