திருத்தணி அருகே கணவருக்கு 2 ஆவது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த மருமகள் மானாரை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நெமிலிகாலனி ராஜாத்தி தெருவை சேர்ந்தவர் சபாபதி . விவசாய கூலித்தொழிலாளியான இவரது மகன் பிரபாகரனனுக்கும் சென்னை மாதவரத்தை சேர்ந்த காயத்திரி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் விபத்துக்குள்ளானார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத்தகராறில் காயத்திரி கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் பிரபாகரனுக்கு அவரது தந்தை சபாபதி, கடந்த சில மாதங்களுக்குமுன்பு வேறு ஒரு பெண்ணுடன் 2-வது திருமணம் செய்து வைத்தார். இதனை அறிந்த காயத்திரி தன் தாய் கலைவாணியுடன் நெமிலிக்கு வந்து அங்கேயே குடிசை அமைத்து தங்கினார். பின்னர் கணவர் மற்றும் மாமனாருடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் சபாபதி தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மீது தீப்பிடித்து எரிந்தது. தீயில் கருகிய சபாபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சபாபதி போலீசார் மற்றும் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தபோது மருமகள் காயத்திரியும், அவரது தாயார் கலைவாணியும் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள்’ என்று தெரிவித்தார். ஆனால் சபாபதி உயிரிழந்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த திருத்தணி காவல் துறையினர் காயத்ரி மற்றும் அவரது தாயார் கலைவாணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.