இரண்டு மதம் மாறி இரண்டு திருமணம் செய்த என்ஜினியர் ….அதிரடி கைது !!

By Selvanayagam PFirst Published Nov 2, 2019, 8:41 AM IST
Highlights

முதல் மனைவியை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்த குமரி என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இவர் 2 பெண்களையும் மணப்பதற்காக கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் தங்க பொன்சன் . மும்பையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்தார். மும்பையை சேர்ந்தவர் பாத்திமா விபத்தில் கணவரை பறிகொடுத்தவர். தாயுடன் வசித்து வந்த பாத்திமாவுடன் தங்க பொன்சன், நெருங்கி பழக தொடங்கினார். கடந்த 2010-ம் ஆண்டு தங்க பொன்சனுக்கும், பாத்திமாவுக்கும் திருமணம் நடந்தது.

பாத்திமாவை மணப்பதற்காக தங்க பொன்சன், இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறினார். மேலும் தன்னுடைய பெயரை முகமது அலிசேக் என மாற்றி கொண்டார். திருமணத்துக்கு பிறகு பாத்திமாவுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.

இதற்கிடையே 2016-ம் ஆண்டு குழந்தைகள், மனைவியை அழைத்து கொண்டு தங்க பொன்சன் சொந்த ஊருக்கு வந்தார். அங்கு தன்னுடைய தாய் தமிழ்செல்வியுடன்  தங்கினார். மேலும் நாகர்கோவிலில் உள்ள கம்பெனியில் அவர் வேலை பார்த்துள்ளார். இதன்பிறகு தங்கபொன்சனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாத்திமாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். அதோடு நின்று விடாமல், மும்பையில் பாத்திமாவின் வீட்டை விற்று அதில் உள்ள பங்கையும் பெற்று தருமாறு வற்புறுத்தினார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பாத்திமாவை மும்பைக்கு தங்க பொன்சன் அனுப்பி வைத்தார். வெளியூரில் தனக்கு வேலை கிடைத்திருப்பதால், சில மாதங்கள் அங்கு இருக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் தங்கபொன்சன் வேலைக்கு செல்லாமல், சொந்த ஊருக்கு வந்தார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சகீலா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு தங்கபொன்சனின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். சகீலாவை மணப்பதற்காக தங்க பொன்சன் முஸ்லிம் மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

சகீலாவை மணமுடித்த தகவலை தன்னுடைய முகநூலில் அவர் பதிவிட்டார். இதனை பார்த்த பாத்திமா அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளுடன் மும்பையில் இருந்து வந்த பாத்திமா, தங்கபொன்சனிடம் முறையிட்டார்.

அப்போது, தன்னுடைய தாயை கவனிப்பதற்காக இன்னொரு திருமணம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் தாய் தமிழ்செல்வி, 2-வது மனைவி சகீலாவுடன் சேர்ந்து பாத்திமாவை தாக்கி அவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாத்திமா புகார் கொடுத்தார்.

அதன்பேரில் தங்க பொன்சன், தமிழ்செல்வி, சகீலா ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தங்க பொன்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!