கொலையானவரை அடக்கம் செய்ய குடும்பத்தினருக்கு வசதி இல்லை.. பர்சில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்த காவல்துறை அதிகாரி!!

By Asianet TamilFirst Published Sep 13, 2019, 3:55 PM IST
Highlights

வேதாரண்யம் அருகே கொலை செய்யப்பட்டவரை அடக்கம் செய்ய அவர் குடும்பத்தினரிடம் பணம் இல்லாததால், மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பணம் கொடுத்து உதவிய சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியம்பள்ளியைச் சேர்ந்தவர் செந்தில். நேற்று முன்தினம் குடும்பத்தகராறு காரணமாக அவரது உறவினர் ரவி என்பவரால் செந்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் செந்திலின் தாய் மற்றும் ரவியின் மனைவி, மகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொலையான செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவியை கைது செய்த காவல்துறை, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த கொலை குறித்து விசாரிப்பதற்காக அந்த பகுதிக்கு வேதாரண்யம் டி.எஸ்.பி சபியுல்லா வந்தார்.

அப்போது பிரேத பரிசோதனை முடிந்து செந்திலின் உடல் அவரது வீட்டிற்கு வந்திருக்கிறது. உப்பளத்தில் வேலைப் பார்த்த கூலித் தொழிலாளியான செந்தில் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்ததால் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாமல் தவித்துள்ளனர்.  அதைப் பார்த்த காவல்துறை அதிகாரி சபியுல்லா தனது பர்சில் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து இறுதிச் சடங்குகளை நடத்துங்கள் என்று கூறினார்.

இந்த நிகழ்வு அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

click me!