தீரன் திரைப்பட பாணியில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை... பவாரியா கும்பலை மடக்கி பிடித்த தமிழக போலீஸ்..!

By vinoth kumarFirst Published Sep 22, 2019, 2:32 PM IST
Highlights

சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்த 7 பவாரியா கொள்ளையர்கள் மும்பையில் சிக்கினர். அவர்களை அழைத்து வர சென்னை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். 

சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகளை கொள்ளையடித்த 7 பவாரியா கொள்ளையர்கள் மும்பையில் சிக்கினர். அவர்களை அழைத்து வர சென்னை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். 

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (52). தொழில் அதிபரான இவர், கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவர், சபரிமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். ரமேசின் மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 120 சவரன் தங்க நகை, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது 3 வடமாநில வாலிபர்கள் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிவதும், பின்னர் ரமேஷ் வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதிப்பதும், கொள்ளையடித்த நகைகளை பையில் போட்டு மீண்டும் வெளியே வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளை வைத்து வடமாநில கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை உதவி ஆணையர் சங்கர நாராயணன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொள்ளையர்களை அழைத்து வர போலீசார் மும்பை விரைந்தனர். இந்நிலையில், பவாரியா கும்பலை பிடிப்பது என்பது மிகவும் கடினமான வேலை என்றும் பவாரியா அந்த கும்பலை பிடித்ததற்காக சென்னை காவல் ஆணையர் மற்றும் காவல்துறை குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று  முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.

click me!