கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் அண்ணியை கற்பழிக்க முயன்ற தம்பியை அண்ணன் கத்தியால் குத்தி படுகொலை செய்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். மேக்களப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மாதப்பன் நாகராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மாதப்பன் என்பவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். மாதப்பன் கட்டிட தொழில் செய்து வருகிறார். அவரது தம்பி நாகராஜ் கார்பெண்டர். நாகராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி நாகராஜுக்கும், மாதப்பன் மனைவி வரலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு நாகராஜ் குடித்துவிட்டு வரலட்சுமியை கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாதப்பன் வீட்டின் அருகே நின்றிருந்த நாகராஜை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாதப்பன் சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.