அசிங்க அசிங்கமா பேசி 18% சிறுவர்களை மனரீதியாக பாதித்த பப்ஜி மதன்.. ஜாமின் மனு ரத்து, நீதி மன்றம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 27, 2022, 7:15 PM IST
Highlights

பப்ஜி மதனின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் ஜாமீன் மனுவையும் ரத்து செய்த சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பப்ஜி மதனின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் ஜாமீன் மனுவையும் ரத்து செய்த சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஆபாசமாக பேசி சிறுவர்-சிறுமிகளை மூளைச்சலவை செய்து பணம் பறித்தார் என்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பப்ஜி மகனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்களை ஆபாசமாக பேசுதல், சிறுவர்கள் மத்தியில், பெண்கள் மத்தியில் வக்கிரமாக பேசுதல்,  தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்தனர்.

அதன் பின்னர் தலைமறைவாக இருந்த மதனை 2021 ஜூன் 18 அன்று தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அவர் மீது ஏராளமான அடுக்கடுக்கான புகார்களை வந்தன. பல பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மதன் தங்களிடம் நெருக்கமாக பேசி பணத்தை பறித்ததாகவும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மதன் ஒரு சைபர் குற்றவாளி என அறிவித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார். ஜூன் 5ஆம் தேதி அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் பப்ஜி மதனின் ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது நிலையில்  மூன்றாவது முறையாகவும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த ஒன்பது மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளது, எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மதன் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர், தேவராஜன் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற காரணத்திற்காகவே ஜாமீன் வழங்கிட வேண்டுமென்று அவசியமில்லை என அவரது ஜாமின் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சுமார் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் களைக் கொண்ட யூடியூப் சேனல் வைத்துள்ள பப்ஜி மதன் பப்ஜி விளையாடிய போது பேசிய ஆபாசத்தால் 18 சதவீத சிறுவர்களும்,  64 சதவீத இளைஞர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு முழுக்க முழுக்க மதன் தான் காரணம்,  அவர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும், எனவே பப்ஜி மதனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் மீண்டும் அதே குற்றத்தை செய்ய வாய்ப்பிருக்கிறது என வாதிடப்பட்டது. எனவே இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பஜ்ஜி மகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  
 

click me!