சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் மாதாவரம் காவல் நிலையத்தின், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சதீஷ். தனிப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சதீஷ் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது.
விசாரணையில், மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த ரேவதி என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ரேவதியின் மகளான 15 வயது சிறுமிக்கும் துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் தாய் ரேவதி, அவருடைய உறவினரான நிலவழகி ஆகியோரிடமும் புழல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் முடிவில் சிறுமியின் தாய் ரேவதி, உறவுக்கார பெண் நிலவழகி, மாதவரம் எஸ்.ஐ. சதீஷ் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.