
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு வயது 26. இவரும் புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோனிகா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பள்ளி காலம் முதலே இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லாத நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
ஆகாஷ் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மோனிகா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களாக அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக வீட்டிற்கு ஏசி வாங்கி தருமாறு மோனிகா ஆகாஷிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த நிலையில் ஆகாஷ் நேற்று இரவு தனது தம்பி அவினாஷ், தந்தை மற்றும் தாயார் ஆகியோருடன் வீட்டில் மொட்டை மாடிக்கு தூங்க சென்றார். மோனிகா மட்டும் வீட்டில் தனியாக தூங்கினார்.
காலையில் எழுந்து வந்து பார்த்தபோது மோனிகாவின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆகாஷ் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மோனிகா ஃபேனில் சடலமாக தொங்கியுள்ளார். தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோனிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மோனிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் மோனிகா உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வர கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050, 044-24640060, help@snehaindia.org.