சித்தப்பாவைக் காதலித்த ஆசிரியை…. கட்டாயத் திருமணம் செய்து வைத்ததால் மறுவீடு சென்றபோது தற்கொலை….

By Selvanayagam PFirst Published Nov 15, 2018, 11:51 AM IST
Highlights

சின்னமனூர் அருகே ஆசிரியை ஒருவர் தனது சித்தப்பாவை காதலித்து வந்த நிலையில், வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த ஆசிரியையும், சித்தப்பாவும் விஷம் அருந்தினர். இதில் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

 

சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்த பாண்டியன்  என்பரின் மகள் ரம்யா .  பி.எஸ்சி, பி.எட் பட்டதாரி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இவருக்கும், பெரியகுளம் அருகே உள்ள சரத்துபட்டியை சேர்ந்த ரெங்கராஜ்  என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மறுவீட்டுக்காக சரத்துப்பட்டியில் இருந்து புலிக்குத்தியில் உள்ள பாண்டியன் வீட்டுக்கு மணமக்கள் வந்தனர். பின்னர் அவர்கள், புலிக்குத்தி நடுத்தெருவில் உள்ள பாண்டியனின் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர். மணமக்களுடன், ரம்யாவின் சித்தப்பா முத்துகிருஷ்ணன் என்பவரும் சென்றார். அப்போது ரெங்கராஜ் வீட்டுக்குள் சென்று விட்டார்.


வீட்டுக்கு வெளியே முத்துகிருஷ்ணனும், ரம்யாவும் பேசி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் திடீரென மயங்கி விழுந்தனர். இதனை கண்ட ரெங்கராஜ் மற்றும் ரம்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர், அவர்கள் 2 பேரும் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக இறந்தார். முத்து கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ஆசிரியை ரம்யா, தனது தந்தையின் தம்பியான  முத்துக்கிருஷ்னனை காதலில்து வந்துள்ளார். இது குறித்து  தெரிந்த உடனேயே, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது தவறு என்றும் சாத்தியம் இல்லை என்றும் பலமுறை ரம்யாவை கண்டித்திருக்கிறார்கள்.

 

ஆனால் ரம்யாவோ பிடிவாதமாக இருந்ததுடன், தன் காதல் இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது என்று பெற்றோரிடம் எடுத்து சொல்லி வந்துள்ளார். ரம்யாவின் பிடிவாதத்தை பார்த்ததும் பயந்துபோன பெற்றோர்கள், உடனடியாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டாரிடம்  இந்த காதல் விவகாரத்தை மறைத்து திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். திருமணம் நடந்ததை ரம்யா - முத்துகிருஷ்ணனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்ததும் தற்கொலைக்கு துணிந்து விட்டார்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும் போலீசார் இது குறித்து தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!