மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த துவார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்(52). நரியன்புதுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஞானசேகரன் (50) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலரை அன்பரசன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
பாலியல் பலாத்காரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் ஞானசேகரனிடம் புகார் கூறியும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அன்பரசனுக்கு 3 பிரிவுகளில் 49 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.45ஆயிரம் அபராதமும், தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.