
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (57). தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 11ம் தேதி, எஸ்பிஐ வங்கி பெயரில் பான் கார்டை புதுப்பிக்குமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியை அவர் திறந்ததும், வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டின் கடைசி 4 இலக்க எண்ணை நிரப்ப கோரிய விண்ணப்பம் வந்துள்ளது.
உடனே அவர் கேட்ட விவரங்களை பூர்த்தி செய்ததை அடுத்து அதற்கான ஓ.டி.பி வந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்திலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.72,000, ரூ.25,000, மற்றும் ரூ.6,500 என மூன்று தவனையாக அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது.
அப்போதுதான் அவருக்கு வந்தது வங்கி பெயரில் போலியான குறுஞ்செய்தி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் இதுகுறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலிஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வங்கி பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி பணம் எடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!