பீதியூட்டும் OMICRON.. தொற்று வந்தால் பாதிப்பு எப்படி இருக்கும்.? தொற்றிலிருந்து மீண்ட மருத்துவரின் அனுபவம்!

By Asianet TamilFirst Published Dec 5, 2021, 9:49 PM IST
Highlights

ஓமைக்ரானின் வீரியம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தொண்டை அரிப்பு, தலைவலி, உடல் சோர்வு என லேசான அறிகுறிகள் மட்டுமே தெரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர், அந்த தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், உலக நாடுகளில் இரண்டாம் அலையாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்த கட்டத்துக்கு இன்னும்  தீவிரமாக உருமாறிய கொரோனா வைரஸுக்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டியுள்ளனர். டெல்டா பிளஸைவிட வேகமாக பரவும் தன்மை கொண்ட ஓமைக்ரான இதுவரை உலகில் 38 நாடுகளில் பரவி உள்ளது. முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வகை கொரோனா தொற்றால், இதுவரையில் உலக முழுவதும் சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் 5 பேர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஓமைக்ரானின் வீரியம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தொண்டை அரிப்பு, தலைவலி, உடல் சோர்வு என லேசான அறிகுறிகள் மட்டுமே தெரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்றின் தீவிரம் தெரிய வர 7 முதல் 8 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒமைக்ரான் தொற்றை கண்டு யாரும் பதற்றமடைய தேவையில்லை என அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் அண்மையில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 46 வயதான மருத்துவரும் ஒருவராவார். இவர் தனக்கு ஏற்பட்ட ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அந்த மருத்துவர் கூறுகையில், “எனக்கு லேசான ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் மட்டுமே இருந்தது. எனக்கு ந்தவுடன் 13 நாட்கள் தனிமையில் இருந்தேன். உயிருக்கு அச்சுறுத்தல் தரும் அளவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. வழக்கமான பாரசிட்டமால், மல்ட்டி வைட்டமின் போன்ற மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொண்டேன். என்னுடைய ஆக்சிஜன் அளவும் குறையவில்லை. தற்போது முழுமையாக குணமடைந்து நலமாக இருக்கிறேன்.

எனவே, ஒமைக்ரான் தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா அறிகுறிகள் தெரிந்தாலே மக்கள் உடனே பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். 

click me!