NeoCov Virus:இன்னும் மனிதர்களை தாக்கவில்லை..முதற்கட்ட ஆய்வு தான் இது..விவரிக்கும் மருத்துவ நிபுணர்கள்..

By Thanalakshmi VFirst Published Jan 28, 2022, 9:21 PM IST
Highlights

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள நியோகோவ் எனும் வைரஸ் இதுவரை மனிதர்களிடம் பரவவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் `மெர்ஸ்' என்ற வைரஸ் நோய் பரவியது. மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் என்பதன் சுருக்கமே ‘மெர்ஸ்’. ஜுரம், இருமல், அதன்பின் சுவாசக் கோளாறு என்று பிரச்னை தீவிரமாகும். கிட்டத்தட்ட கொரோனா நோய் தொற்றி அறிகுறிகளை கொண்டுள்ள இந்நோய் ‘மெர்ஸ்-கோவ்’ (MERS-CoV) என்ற வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் ஆகும். கொரோனா போலவே இதுவும் வௌவால்களில் இருந்து பரவிய வைரஸ் தான். 

வௌவால்களிலிருந்து ஒட்டகங்களுக்குப் பரவி எப்படியோ ஒரு கட்டத்தில் மனிதர்களை வந்து அடைந்துவிட்டது. மெர்ஸ் நோயை உண்டாக்கிய வைரஸுக்கு வேகமாகத் தொற்றும் தன்மை இல்லை. அதனால் சில நாடுகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பரவி, அப்படியே காணாமல் போய்விட்டது. ஆனாலும், அது தொற்றியவர்களில் மூன்றில் ஒருவர் மரணமடைந்தார்கள். மெர்ஸ் நோயினால் அப்போதைய காலகட்டத்தில் உலக நாடுகள் ஸ்தம்பித்து தான் போனது.தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள நியோகோவ் எனும் வைரஸ் ஆனது மெர்ஸ் வைரஸ் போல மரணத்தை ஏற்படுத்தும். மேலும் கொரோனா வைரஸ் போன்று உலகம் முழுக்கப் பல நாடுகளில் வேகமாகப் பரவி, பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று சீனாவில் வூகான் ஆய்வக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் வௌவால்கள் மத்தியில் இந்த நியோகோவ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸ் விலங்குகள் மத்தியில் மட்டுமே பரவி வருகிறது. இப்போதைய வடிவில் இருக்கும் வரை இது மனிதர்களைத் தொற்றும் அபாயம் இல்லை என்று விஞ்ஞானிகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்குப் பரவும் நேரத்தில், அதன் என்சைம்களில் சிலவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு உருமாற்றம் இந்த நியோகோவ் வைரஸில் ஏற்பட்டால், அதன்பின் பேரழிவைத் தடுக்க முடியாது என்பதே சீன விஞ்ஞானிகளின் அச்சம் என்று சொல்லபடுகிறது.

இப்போது உலகம் முழுக்க போடப்படும் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசிகள் எதுவுமே இந்த நியோகோவ் வைரஸிலிருந்து பாதுகாப்பு தராது. ஏனெனில், அது முற்றிலும் வேறு வடிவத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது  மெர்ஸ்-கோவ் (MERS-CoV) வைரஸ்  மற்றும்  சார்ஸ் - கோவ் (SARS- CoV) வைரஸ்களின் கலவையாக இருப்பதாக கூறுகின்றனர். NeoCoV எனும் புதிய வைரஸின் , நெருங்கிய தொடர்பு கொண்ட  பிடிஎப்-2180- கோவ் வைரஸ் மனிதர்களிடம் பரவும் தன்மை பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

சீன அறிவியல் அகாடெமியும் வூஹான் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நியோகோவ் வைரஸ் ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி வெறும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனம் இதுவரை கருத்து சொல்லவில்லை. ரஷ்ய அரசின் வைரஸ் மற்றும் பயோ டெக்னாலஜி ஆராய்ச்சி மையம், ‘‘இந்த நேரத்தில் இன்னொரு கொரோனா வைரஸ் மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பில்லை. இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது’’ என்று கூறியுள்ளது. 

click me!