அதிர்ச்சி தகவல்... சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா!!

By Narendran SFirst Published Jan 28, 2022, 4:08 PM IST
Highlights

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கொரோனாவின் 3வது அலை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமலில் இருந்தன. இந்தத் தொடர் கட்டுப்பாடுகளின் காரணமாக கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. இதை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாகவும், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பின்னர் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்து அறிவித்தார். இருப்பினும் கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில்  28,515 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 52 ஆயிரத்து 751ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில்  53 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 412ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று மூன்றாம் அலையாக பரவி வரும் நிலையில் திரை பிரபலங்களும், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே நேற்று நடந்த முதலமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் சங்கர் ஜிவால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!