Omicron : தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 70 பேர்..? கோவை மக்களுக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ஒமைக்ரான்..

By Raghupati RFirst Published Dec 7, 2021, 11:33 AM IST
Highlights

தென் ஆப்பிரிக்கா உள்பட மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ள 12 நாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 70 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகையே இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து, தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகையாக உருமாற்றமடைந்துள்ளது. டெல்டா உள்பட முந்தைய கொரோனா நோய்த் தொற்று வகைகளைக் காட்டிலும் ஒமிக்ரான் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், போட்ஸ்வானா, சிங்கப்பூர், ஹாங்காங், இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான் உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மிகத்தீவிரமாக பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங் உள்பட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவர்களை 7 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட 12 நாடுகளில் இருந்து கடந்த 5 நாள்களில் கோவைக்கு வந்த 70 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் ஒமைக்ரான் வைரஸை கண்டறிய அனைத்து வசதிகளும் செய்துள்ளதை சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி ஆய்வு மேற்கொண்டார். அதற்குள் 70பேர் கோவை விமான நிலையத்திற்கு வந்திருப்பது மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2வது அலையில் சிக்கித்தவித்த கோவை மக்கள், தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று இருக்கும் நாடுகளில் இருந்து 70 பேர் கோவைக்கு வந்துள்ளனர் என்ற செய்தி கோவை மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

click me!