அதிரடியாக நுழைந்த போலீஸ்! தப்பி ஓடிய முருகதாஸ்! நள்ளிரவில் நடந்தது என்ன?

By sathish kFirst Published Nov 9, 2018, 8:32 AM IST
Highlights

சர்கார் படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சி அமைத்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய சென்ற போலீசார் சென்ற போது அவர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.கவை நேரடியாகவும் மறைமகமாகவும் விமர்சித்து ஏராளமான காட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதிலும் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்று பெயர் வைத்துள்ளனர். இது போதாக்குறைக்கு அரசின் இலவச திட்டங்களுக்கு எதிராக ஆக்ரோசமாக விஜய் வசனம் பேசுவது போன்று காட்சிகள் உள்ளன.

மேலும் ஒரு விரல் புரட்சி என்ற பாடலில் தோன்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் உள்ள இலவச பொருட்களான கிரைன்டர், மிக்சியை ரோட்டில் தூக்கி போட்டு கொளுத்துவது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு தான் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இலவச பொருட்களுக்கு எதிராக மக்களை தூண்டி வன்முறைக்கு விஜய் வித்திட்டுள்ளதாக சண்முகம் தெரிவித்திருந்தார்.

மேலும் விஜயின் செயல் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததாகவும் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். அத்துடன் வன்முறையை தூண்டும் வகையில் படம் எடுத்த விஜய், முருகதாஸ் மற்றும் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று சென்னையில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் திடீரென சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். தன்னுடை வீட்டிற்கு வந்து போலீசார் பலமுறை கதவை தட்டியதாகவும் தான் இல்லை என்று கூறியதும் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் முருகதாஸ் கூறியுள்ளார்.  முருகதாசை கைது செய்யவே போலீசார் சென்றதாக சர்கார் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

ஆனால் முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்கவே சென்றதாக விருகம்பாக்கம் போலீசார் கூறியுள்ளனர். இதனிடைய சீப்ரோஸ் குடியிருப்புக்கு போலீசார் நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு சென்றுள்ளனர். ஆனால் பாதுகாவலர்கள் முதலில் போலீசாரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும் எதற்காக வந்துள்ளீர்கள் என்கிற தகவலையும் கேட்டுள்ளனர். அதற்கு முருகதாசை பார்க்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் வந்துள்ள தகவலை சீப்ரோஸ் காவலாளிகள் முருகதாஸ்க்கு இன்டர்காம் மூலம் தெரிவித்துள்ளனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட முருகதாஸ் தனது வீட்டில் இருந்து வெளியேறி தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். இதன் பின்னரே போலீசார் முருகதாஸ் வீட்டுக்கு சென்று அவர் இல்லை என்று கூறி திரும்பி வந்துள்ளனர். மேலும் முருகதாஸ் எங்கு இருக்கிறார் என்றும் போலீசார் அவரது வீட்டில் விசாரித்துள்ளனர்.

இதனிடையே திட்டமிட்டபடி கைது செய்ய முடியவில்லை என்பதால் தான் போலீசார் பாதுகாப்புக்காக சென்றதாக விளக்கம் அளித்துள்ளனர். பாதுகாப்புக்கு சென்றவர்கள் நள்ளிரவு சென்றது ஏன்? ஏற்கனவே சீப்ரோஸ் குடியிருப்பில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் இருக்கும் நிலையில் குடியிருப்பில் உள்ள முருகதாஸ் வீட்டின் கதவை தட்டியது ஏன் என்கிற கேள்விக்கு விடை இல்லை.

click me!