”எங்களைக் கொச்சைப்படுத்திய விஜய் சேதுபதியைக் கைதுசெய்யவேண்டும்”...திருநங்கைகள் போர்க்கொடி...

By Muthurama LingamFirst Published Mar 31, 2019, 5:24 PM IST
Highlights

’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கைகள் குறித்த உண்மைக்குப் புறம்பான காட்சிகளைச் சித்தரித்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவையும் அப்படத்தில் திருநங்கையாக நடித்த விஜய்சேதுபதியையும் கைது செய்யவேண்டும் என்று திருநங்கைகள் போர்க்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.


’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கைகள் குறித்த உண்மைக்குப் புறம்பான காட்சிகளைச் சித்தரித்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவையும் அப்படத்தில் திருநங்கையாக நடித்த விஜய்சேதுபதியையும் கைது செய்யவேண்டும் என்று திருநங்கைகள் போர்க்குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஆணாக இருந்து ஒரு குழந்தைக்குத் தந்தையான பிறகு ஆபரேசன் செய்துகொண்டு திருநங்கையாக மாறும் ஒரு பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டரின் இச்சைக்கு உடன்படுவதாக மிக வக்ரமான இரு காட்சிகள் உள்ளன. உச்சபட்சமாக மும்பையில், தான் இரண்டு குழந்தைகளைத் திருடி பிச்சையெடுப்பவர்களிடம் விற்றதாக தனது அனுபவம் ஒன்றையும் படத்தில் விஜய்சேதுபதி  விவரிப்பார்.

இந்தநிலையில் இந்தப் படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக செயற்பாட்டாளர் திருநங்கை ரேவதி கூறுகையில், “விஜய் சேதுபதியாகிய உங்கள் மீது மக்கள் நிறைய மரியாதை வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே திருநங்கைகள் குழந்தைகளைக் கடத்துபவர்களா? எப்போது மும்பையில் திருநங்கைகள் குழந்தைகளை கடத்தினார்கள். அதை நீங்கள் பார்த்தீர்களா. திருமணமானவர் திருநங்கையாக மாறியதாகக் காட்டியிருக்கிறீர்கள். நான் 13 வயதில் பெண்மையை உணர்ந்து பல இடங்களில் அடிபட்டேன். புடவை கட்டிக் கொண்டு வீட்டுக்கு செல்கிறீர்கள். நீங்கள் வெள்ளை மொழி வாழ்க்கைக் கதையை படிக்க வேண்டும்.

கோவையைச் சேர்ந்த சில்கி பிரேமா கூறுகையில், “இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விஜய் சேதுபதியையும் இப்படத்தை இயக்கியவரையும்  கைது செய்ய வேண்டும்” என்றார்

கல்கி சுப்ரமணியம் தனது ட்விட்டர் பதிவில், சூப்பர் டீலக்ஸ் படம் திருநங்கைகள் சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது. முழுக்க முட்டாள்தனமான, தவறான சித்தரிப்பாக விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரம் அமைந்துள்ளது. இது வெட்கக்கேடானது அதேநேரத்தில் அதிர்ச்சிகரமானது. நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

click me!