என்ன வினையோ சூழலோ தெரியவில்லை, ராம் சரணின் தெலுங்குப் படமான ’வினய விதேய ராமா’வில் செகண்ட் ஹீரோ போல ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
பாலுமகேந்திரா, ஷங்கர், மணிரத்னம் உட்பட தமிழ்சினிமாவின் பெரிய தலைகளின் படங்களின் முன்ன ஒரு காலத்து நாயகனும், உலக அழகி ஐஸ்வர்யா ராய் உட்பட டாப் நட்சத்திரங்களின் ஆசை நாயகனுமாகிய நடிகர் பிரசாந்த் தெலுங்குப் படம் ஒன்றில் ஜூனியர் ஆர்டிஸ்டாக, அதாவது கதாநாயகனுக்கு எடுபிடியாக நடிப்பதாக நடமாடும் செய்தி ஒன்று, இன்னும் மிச்சமிருக்கிற ஆயிரத்துச் சொச்ச பிரசாந்த் ரசிகர்களை பெரும் நொம்பலத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
‘90ல் ‘வைகாசி பொறந்தாச்சி’ படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் இதுவரை சுமார் 50 படங்களில் நடித்திருக்கிறார். 2002ல் ஹரி இயக்குநராக அறிமுகமான ‘தமிழ்’ படத்துக்குப் பின்னர் பிரசாந்த் கடந்த 16 ஆண்டுகளாக பிடிவாதமாக ஹிட் படம் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் சொந்தப்படம், அப்பா டைரக்ஷன் என்று தமிழ்சினிமா ஹீரோக்கள் பட்டியலில் ‘பிரபலமானவர்கள் விலாசங்கள்’ புத்தகங்களில் அவர் பெயரும் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் என்ன வினையோ சூழலோ தெரியவில்லை, ராம் சரணின் தெலுங்குப் படமான ’வினய விதேய ராமா’வில் செகண்ட் ஹீரோ போல ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் இதுவரை வெளியான படம் குறித்த செய்திகளில் பிரசாந்துக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இதைக்கண்டு பிரசாந்தின் ரசிகர்கள் பெரும் சஞ்சலத்துக்கு ஆளாகியிருந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட ‘வினய விதேய ராமா’ டீஸரிலும் சும்மா ரெண்டே ரெண்டு ஷாட்களில் பிரசாந்த் ராம்சரனுக்கு பின்னால் நடந்து வந்து காணாமல் போனார்.
அதைக்கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே என்று துடித்த பிரசாந்த் ரசிகர்கள்...’டேய் என்னடா ஆச்சு... எங்க தலய ஒரு ஓரமா நிறுத்தி வச்சிருக்கீங்க... அவர் எவ்வளவு பெரிய டாப் ஸ்டார், அவரைப்போய் ஜூனியர் ஆர்டிஸ்டாக்கிட்டீங்க...’ என்று துவங்கி முகநூல், ட்விட்டர் வலைதளங்களில் ரத்தவாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ரசிகர்களைக் காப்பாற்ற தமிழக சுகாதாரத்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா?