Manmadha Leelai : மாநாடு வெற்றிக்கு பின் யுவனை கழட்டிவிட்ட வெங்கட் பிரபு... மன்மதலீலை-க்காக பிரிந்த கூட்டணி

By Ganesh PerumalFirst Published Jan 17, 2022, 6:47 AM IST
Highlights

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 8 படங்களுக்கும் யுவன் தான் இசையமைத்திருந்தார். ஆனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் மன்மதலீலை என்கிற படத்தில் இந்த கூட்டணி பிரிந்துள்ளது. 

இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் கங்கை அமரன். இவரது மூத்த மகனான வெங்கட் பிரபு, ஏப்ரல் மாதத்தில் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர், கடந்த 2007-ம் ஆண்டு ‘சென்னை 28’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

நட்பை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் அவருக்கு வெற்றியை தேடித் தந்தது. பின்னர் சரோஜா, கோவா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு, கடந்த 2011-ம் ஆண்டு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். 

இப்படத்துக்கு பின் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய பிரியாணி, சூர்யாவின் மாஸ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால், மீண்டும் சென்னை 28 படக்குழுவுடன் கூட்டணி அமைத்த வெங்கட் பிரபு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து, வெற்றி வாகை சூடினார். இதன்பின் 5 ஆண்டுகளாக அவர் இயக்கத்தில் எந்த படமும் ரிலீசாகாமல் இருந்தது.

அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு, பல்வேறு சர்ச்சைகளையும், தடைகளையும் கடந்து கடந்தாண்டு வெளியான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. பொதுவாக வெங்கட் பிரபு படங்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பது யுவனின் இசை தான். இவர் கூட்டணி என்றால் பாடல்கள் நிச்சயம் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு வெற்றிக்கூட்டணியாக வலம் வந்தனர்.

இதுவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 8 படங்களுக்கும் யுவன் தான் இசையமைத்திருந்தார். ஆனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் மன்மதலீலை என்கிற படத்தில் இந்த கூட்டணி பிரிந்துள்ளது. இப்படத்திற்கு யுவனுக்கு பதில் பிரேம் ஜி இசையமைத்து உள்ளார். இப்படத்தின் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் யுவன் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

click me!