சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிர்ப்பை மீறி சட்டவிரோதமாக சர்கார் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணைதளத்தில் வெளியிட்டுள்ளது. இது சன் பிக்சர்ஸ் உட்பட அந்த படக்குழுவினரை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிரிண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று பதிவிடப்பட்டது.
இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. ஒவ்வொரு தியேட்டரிலும் இதற்காக தனி ஆட்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். மேலும் உயர்நீதிமன்றமும் வெளியிட கூடாது என்று தடைவிதித்தது.
ஆனாலும் இன்று காலை தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மீண்டும் ட்விட்டரில் பதிவு செய்தார்கள். இன்று மதியம் சர்கார் படம் இணைய தளத்தில் வெளியானது.
இதனால் சன் பிக்சர்ஸ் மற்றும் சர்கார் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.